இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 6, 2017

நாகூர் மட்டன் தாளிச்சா ஆனம் ...செய்வது எப்படி ..?

நாகூர் என்றாலே பிரியாணியும் மட்டன் தாளிச்சா குருமாவும் தான்.அதுவும் திருமணம் போன்ற விசேஷ நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய சகோதரிகள் மரவை என்று சொல்லப்படும் பெரிய தாம்பாளங்களில் பிரியாணியை போட்டு அதன் நான்கு பக்கங்களிலும் நான்கு பேர்  உட்கார்ந்து கொண்டு தாளிச்சாவோடு பகிர்ந்துண்ணும் அழகு அந்த ஊருக்கு மட்டுமே சொந்தமான பெருமை.அத்தகைய பெருமை வாய்ந்த ,சுவை மிகுந்த தாளிச்சா குருமாவை செய்து பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்.
மட்டன்                                       -அரை கிலோ
துவரம் பருப்பு                          - கால் கிலோ
வெங்காயம்                              - 2
தக்காளி                                      -3
பச்சை மிளகாய்                       -5
கத்திரிக்காய்                             -2
முருங்கைக்காய்                      - 1
உருளைக்கிழங்கு                    -2
வாழைக்காய்                            -1
கேரட்                                           -2
புளி                                               - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது              -2 தேக்கரண்டி
தேங்காய் சிறியது                    -அரை மூடி
பட்டை,கிராம்பு,சோம்பு
ஏலக்காய்                                    -சிறிதளவு
சீரகம்                                           -அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி                       -1 தேக்கரண்டி
சாம்பார்பொடி                           -1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி                  - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை.கொத்துமல்லி - சிறிதளவு
பெருங்காயம்                               - அரை தேக்கரண்டி
எண்ணெய்                                    - தேவையான அளவு 
செய்முறை ;
1.முதலில் துவரம் பருப்பை மஞ்சள்பொடி,பெருங்காயம் சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்
2..மட்டனை சுத்தம் செய்து உப்பு ,மஞ்சள்பொடி,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.மட்டன் எலும்புகளோடு பெரிய..பெரிய துண்டுகளாக இருக்கவேண்டும்.
3.காய்கறிகளை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்
4.ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை,கிராம்பு ,ஏலக்காய் தாளிக்கவும்.பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கறிவேப்பிலை,பச்சைமிளகாய்  சேர்க்கவும்.அது நன்கு வதங்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் தக்காளியை சேர்க்கவும்.தக்காளி நன்கு வதங்கியதும் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இப்போது மிளகாய்ப்பொடி,சாம்பார்பொடி,சிறிது மஞ்சள்பொடி,சேர்த்துவிடலாம்,மசாலா வதங்கியதும் வேகவைத்த மட்டனை தண்ணீரோடு சேர்த்து வேகவிடவும்,இப்போது உப்பும் சேர்த்துவிடவேண்டும்.
மட்டனோடு காய்கறிகளும் சேர்ந்து வேகவேண்டும்.காய்கள் நன்கு வெந்ததும் வேகவைத்துள்ள பருப்பை சேர்க்கவும்.எல்லாம் கலந்து கொதி வரும்போது புளிக்கரைசலை சேர்க்கவும்.அதிகம் சேர்த்துவிடவேண்டாம்.பின்பு தேங்காயோடு சீரகம் சேர்த்து அரைத்து கலந்து விடவும்.இறுதியாக கொத்துமல்லி தூவி இறக்கி பரிமாறலாம்.
குறிப்பு; இது கெட்டி பதத்தில் இருக்கவேண்டும்.எனவே அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
இதில் காரம் அதிகம் இருக்காது.சாம்பாரோடு மட்டன் குழம்பு கலந்ததுபோல் வித்யாசமான சுவையை கொடுக்கும்.




No comments:

Post a Comment