இது பெண்களுக்கான பக்கம்.நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் பூவையர் பூங்கா .

Feb 23, 2017

எதிரியை அழிக்க வியூகம் அமைப்போம். -கருவேலமரங்கள் ஒரு பார்வை

"மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்" இது ஒவ்வொரு மனிதனும் உளமார சொல்லும் வாக்கு.ஆனால் வேரோடு வெட்டி ஏறி என்று உலகமே ஒரு மரத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறதென்றால் அந்த மதிப்பு மிக்க எதிரி 'கருவேல மரம்' தான்.வேலியாகவும்,விறகாகவும் பயன்படும் என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் 1877 ம் ஆண்டு அயல்நாட்டிலிருந்து விதை ரூபமாக நம் நாட்டுக்குள் நுழைந்த மாபெரும் பாதகன் இந்த கருவேலமரங்கள். குறிஞ்சி தவிர மற்ற நால்வகை நிலங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்  இந்த கருவேலமரங்கள் நம்முடைய சுற்றுசூழலை அழித்து நம் வாழ்வாதாரங்களை சிதைத்துக்கொண்டிருக்கிறது என்பதை அவசர அவசரமாக அனைவருக்கும் பகிரவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.எந்த வறட்சியையும் வென்று நிலத்தடி நீரை உறிஞ்சி தனக்கு அருகில் எந்த தாவரத்தையும் வளரவிடாத சர்வாதிகாரி இது.இதன் வேர்கள் ஆழமாக மட்டுமல்லாமல் பக்கவாட்டு வரிசையிலும் படர்ந்து வளர்வதால் மழை நீரையும் உறிஞ்சி பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.கருவேலமரங்கள் தானாகவே தங்கள் குடும்பத்தை பெருக்கி தன்னை சுற்றியுள்ள அத்தனை இடங்களையும் ஆக்கிரமித்துக்கொள்ளும் திறன் பெற்றவை.இதன் நஞ்சுள்ள முட்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்தை அள்ளிக்கொடுக்கக்கூடியவை.இவை வளர்ந்துள்ள இடங்களில் புல் பூண்டிலிருந்து அரியவகை மூலிகை வரை எதையும் வளர விடாமல் அழிக்கும் ஆற்றல் கொண்ட அந்நிய சக்தி இது.ஆஸ்திரேலியா,ஐரோப்பா உட்பட 71 நாடுகள் இதை மிகவும் அபாயகர ஒன்றாக தடை செய்துள்ளன.கேரளா  அரசும் கருவேலமரங்களுக்கு எதிராக சட்டம் இயற்றியுள்ளது.


விலங்குகள் இதன் விதைகளை தின்று வெளியேற்றும்போது விழுகிற இடங்களிலெல்லாம் இது முளைக்கிறது.மேலும் காற்றின் மூலமாகவும் இதன் விதைகள் பரவுகின்றன.இது சாதாரண தாவரங்களைவிட மூன்று மடங்கு   தண்ணீரை உறிஞ்சக்கூடியது.இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.கோடைகாலங்களில் பிற மரங்கள் காய்ந்தாலும்  இது பசுமையாக தழைத்து நிற்கும்.இதன் உயரம் 15 அடிக்கு மேல் வளராது என்றாலும் இதன் வேர் 60 முதல் 70 அடிவரை பூமிக்குள் ஊடுருவி செல்லும் வல்லமை பெற்றது.இந்த மரங்களை போர்க்கால அடிப்படையில் அகற்றாவிட்டால் நிலத்தடி நீர் அழிந்து போகும்.கடும் வெப்பம் சூடேற்றும்.விலை நிலங்களும் ,கால் நடைகளும் மலடாகும்.புல், பூண்டுகள் அனைத்தும் பூண்டோடு அழிந்து போகும்.இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூட  இந்த கருவேலமரங்களுக்கு எதிராக தன் வாழ்நாள் உள்ளவரை குரல்கொடுத்தார்.இன்றைய காலகட்டத்தில் வைகோ அவர்கள் கூட கருவேல மரத்திற்கு எதிராக களப்பணியில் குதித்தார்.ஆனாலும் அறியாமை விலகும் வரை இதை அழிக்க முடியாது.எனவே ஒவ்வொருவருக்கும் உணர்த்துங்கள் இதன் தீமையை.ஒவ்வொரு  ஊரிலும் ,ஒவ்வொரு தெருவிலும் கருவேல மரத்திற்கு எதிராக ஆலோசனை நடத்துங்கள்.உள்ளவர்களிடம் உதவி பெற்று இல்லாதவர்களிடம் உழைப்பை பெற்று ஒவ்வொரு இன்ச் ஆகவாவது ஒழிக்கலாம் இந்த எதிரியை.



No comments:

Post a Comment